இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 யூலை 11ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.50 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து இம்முடிவிற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது பணவீக்கத்தினை விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் பேணுவதனுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்ட வேளையில் பொருளாதார வளர்ச்சி நடுத்தர காலப்பகுதியில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு ஆதரவளிப்பதாகவும் காணப்பட்டது.















இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2019 யூன் 19 அன்று தொடக்கி வைத்தது. இது, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றிற்கான தேசிய வெளியீட்டுடன் தொடர்புபட்டதாகும். 
