இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்தி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது.
இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும்.