Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2018 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலின் 1.6 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உணவல்லா வகையில் காணப்படும் விடயங்களின் மேல்நோக்கிய விலைத் திருத்தங்களே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 ஏப்பிலின் 6.1 சதவீதத்திலிருந்து 2018 மேயில் 5.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2018 மே

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட பருவகால சரிவடைதலை தொடர்ந்து மே மாதத்தில் மீட்சியடைந்து ஏப்பிறல் மாதத்திலிருந்து 15.1 சுட்டெண் புள்ளிகள் அதிகரித்து 60.6 சுட்டெண் புள்ளிகளை மே மாதத்தில் பதிவு செய்தது. கொ.மு.சுட்டெண்ணில் ஏற்பட்ட மீட்சிக்கு பிரதானமாக மாதகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கடட் ளைகள் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்பிறல் மாதத்தில் பூர்த்திசெய்யப்படாத கடட்ளைகள் என்பவற்றை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலான குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பெரிதளவில் பங்களித்திருந்தது. புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தன. இருப்பினும், புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியின் தொழில்நிலை துணைச்சுட்டெண் பாதகமான பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகிறது.

பன்னாட்டு நாணய நிதியம், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், ஐ.அ.டொலா் 252 மில்லியன் கொண்ட ஐந்தாவது தொகுதியை விடுத்திருக்கிறது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையுடனான 2018 உறுப்புரை IV ஆலோசனைகளை முடித்துக் கொண்டதுடன் மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் நான்காவது மீளாய்வினை நிறைவு செய்துள்ளதுடன் சிஎஉ 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 252 மில்லியன்) கொண்ட ஐந்தாவது தொகுதியினை விநியோகிப்பதற்கும் ஒப்புதலளித்தது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது சென்மதி நிலுவைக்கும் அரசாங்கத்தின் பரந்த பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் உதவியளிப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 மாச்சு

2018 மாச்சில் வெளிநாட்டுத் துறை கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இறக்குமதி மீதான செலவினம் தொடர்ந்தும் அதிகரித்த போதும் 2018 மாச்சில் ஏற்றுமதிகள் வரலாற்றிலே மிகஉயர்ந்த மட்டத்தினை அடைந்ததன் மூலம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களையும்விட குறைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்குப் பங்களித்தது. 2018 மாச்சில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமையின் மூலம் 2018 சனவரியிலிருந்து அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினைத் தொடர்ந்தும் காட்டின. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2018 பெப்புருவரியில் பதிவுசெய்யப்பட்ட வீழ்ச்சிக்கு மாறாக, இம்மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தன. அதேவேளை சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு மாச்சில், குறிப்பாக, அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையின் காரணமாக சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டின. நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டன. 

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தேசமான்ய அமராநந்த சோமசிறி ஜயவர்த்தன அவர்கள் காலமானார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தேசமான்ய அமராநந்த சோமசிறி ஜயவர்த்தன அவர்களின் மறைவை அறிவிப்பதில் மத்திய வங்கி ஆழ்ந்த கவலையடைகின்றது. அவர் 2018 மே 29ஆம் திகதியன்று தனது 82ஆவது வயதில் காலமானார்.

தேசமான்ய ஏ.எஸ். ஜயவர்த்தன 1995 நவெம்பர் முதல் 2004 யூன் வரை பதவிவகித்த பத்தாவது ஆளுநராவார். இவர் 1958இல் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து கொண்டதுடன் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராக (1977-1980) நியமிக்கப்படுவதற்கு முன்னர் செயலகம், தாபனங்கள் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி ஆகிய திணைக்களங்களில் கடமையாற்றினார். 

1980-1981 காலப்பகுதியில் இவர் ஆளுநருக்கான உதவியாளராகவும் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியதுடன் 1981-1986 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தொழிற்பட்டார். இவர் 1986-1989 காலப்பகுதியில் துணை ஆளுநராகப் பணியாற்றியதுடன் 1993-1994 காலப்பகுதியில் மூத்த துணை ஆளுநராகவும் இருந்தார். 

வெளிநாட்டுப் படுகடன் மற்றும் ஒதுக்குகள் - மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை ஆய்வு செய்கையில் கடன்பாடுகளை மாத்திரமன்றி படுகடன் மீள்கொடுப்பனவுகளையும் அடையாளம் காண்பது அவசியமானதாகும்

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

 செய்தி விடயத்தின் உள்ளடக்கமானது நாட்டின் வெளிநாட்டு நிலைமை தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற தோற்றப்பாடொன்று பற்றி விபரிக்கின்றது. 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 8.9 பில்லியன் கொண்ட கடன்பாடுகள் மத்திய வங்கியின் ஒதுக்குகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டதாக இது தெரிவிக்கின்ற அதேவேளையில், அரசாங்கத்தின் அலுவல்சார் படுகடன் முகாமையாளராக விளங்கும் மத்திய வங்கியினால் இக்காலப்பகுதியில் ஒதுக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிசமான படுகடன் மீள்கொடுப்பனவுகள் பற்றி இக்கட்டுரையானது கவனத்தில் கொள்ளவேயில்லை.

Pages

சந்தை அறிவிப்புகள்