Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த பணவீக்கம் 2020 பெப்புருவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 5.7 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 பெப்புருவரியில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே ஒரே காரணமாக அமைந்திருந்தது. 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 14.7 சதவீதத்தில் அமைந்திருந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.8 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது. 

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 சனவரியின் 4.5 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி - 2019 இரண்டாம் அரையாண்டு

இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2019இன் இரண்டாம் அரையாண்டுப்பகுதியில் 138.9 இனை அடைந்து 2018இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருக்கிறது. காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து மூன்று துணைக் குறிகாட்டிகளான அதாவது வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்திருக்கின்றன. 

வதிவிட காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிகஉயர்ந்த அதிகரிப்பான 10.7 சதவீதத்தினைப் பதிவுசெய்த வேளையில் வர்த்தக காணி மதிப்பீட்டுக் குறிக்காட்டியும் கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி இரண்டும் 10.3 சதவீதத்தினால் அதிகரித்தன. அதேவேளைஇ 2019இன் முதலரையாண்டுப் பகுதியிலிருந்து 2019 இரண்டாம் அரைக்காலப்பகுதியில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

2020 சனவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் அதிகரித்திருக்கிறது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் காணப்பட்ட பொருட்களினது விலைகளின் மாதாந்த அதிகரிப்பே காரணமாகும். உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 திசெம்பரின் 8.6 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 13.7 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்தது. இது 2017 நவெம்பருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்ததொரு அதிகரிப்பாகும். மேலும், 2020 சனவரியில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 3.0 சதவீதத்தில் காணப்பட்டது.

முழுவடிவம்

இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் நிறுத்துதல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் திரட்டுவதனையும் வெளியிடுவதனையும் 2020 யூலை 01ஆம் நாலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது. இத்தீர்மானமானது, உள்நாட்டு நிதியியல் சந்தையில் கடன் சாதனங்களுக்கான அடித்தள அளவுக்குறியீடாக இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் போதுமானளவிற்குப் பயன்படுத்தப்படாமை, இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் உட்பட, வழங்கல் வீதங்களின் திரட்டலையும் வெளியிடுதல்களையும் உலகளாவிய போக்கு கட்டம் கட்டமாக கைவிட்டு வருகின்றமை, நீண்ட காலப்பகுதிக்கான வங்கிகளுக்கிடையிலான சந்தை அளவுகள் மிக மெலிந்து காணப்படும் சூழ்நிலையொன்றில் அநேக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கல் வீதங்களை அறிக்கையிடுகின்றமையினை நிறுத்திவிடுமாறு விடுத்த கோரிக்கைகள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையில் மாற்று அடித்தள அளவுக்குறியீட்டு வட்டி வீதங்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய துணை ஆளுநரின் நியமனம்

நாணயச் சபையானது மாண்புமிகு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநராக திரு. கே. எம். மகிந்த சிறிவர்த்தன அவர்களை 2020 பெப்புருவரி 12ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமித்திருக்கிறது. 

திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 திசெம்பர்

2019 திசெம்பர் காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமானளவில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட கடுமையான சுருக்கமே தூண்டுதலாக விளங்கியது. 2019 திசெம்பரில் சுற்றுலா தொழில்துறையில் விரைவான மீட்சி காணப்பட்ட போதும் இவ்வாண்டுப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன. 2019 திசெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து (ஆண்டிற்கு ஆண்டு) 2019இன் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி மிதமடைவதற்கு உதவியது. அதேவேளை, 2019 திசெம்பர் காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளில் கணிசமான வெளிப்பாய்ச்சலொன்று காணப்பட்ட வேளையில் கொழும்புப் பங்குச் சந்தையிலும் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக உயர்வடைந்து 2020ஆம் ஆண்டின் இதுவரையான பகுதியில் உறுதியாகக் காணப்பட்டது. 

Pages

சந்தை அறிவிப்புகள்