Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூலையில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து,  உணவுப் பணவீக்கம்,  (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 4.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடு மற்றும் வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களைப் பெற்றுக்கொள்கின்றது

2021 ஓகத்து மாத காலப்பகுதியில் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டின் அதன் பகுதியினையும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்காளதேச வங்கிகளுக்கிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையினால் பெறப்பட்ட சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டானது ஐ.அ.டொலர் 787 மில்லியனிற்கு சமனாக இருந்த அதேவேளை, வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியன் பெற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 யூலையில் அதிகரித்துள்ளது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 9.8 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 11.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 2.9 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூலையில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

வெளிநாட்டுச் செலாவணியில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்தல்

கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்வதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள்/ தடுக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது என மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை இறுக்கமடையச் செய்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கு 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 2021 செத்தெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை மீதான சமமின்மையினை கையாளுவதற்கும்  நடுத்தர காலத்தில் எவையேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை வழிமுறை நோக்கிலும் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை ரூபாவின் “மதிப்புக் குறைப்பிற்கு” உரிமம்பெற்ற வங்கிகள் கோரப்படவில்லை

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.

அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டுரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வழமையான ஊடகங்கள் ஊடாகவும் பரப்பப்பட்டு வருகின்ற தவறானதும் தவறாக வழிநடத்துகின்றதுமான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி விடுக்கும் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர் அல்லது பெயர் மற்றும் பதவி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் எவரேனும் வேறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் மூலமே வழங்கப்படும்.

Pages

சந்தை அறிவிப்புகள்