Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான மூன்றாவது இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2022 செத்தெம்பர் 23ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருளானது கடந்த ஆண்டினைப் போன்று ‘பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள்’ தொடர்பில் அமைந்திருந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூலையின் 66.7 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு  பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 82.5 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 84.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 52.4 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 57.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 ஓகத்தில் 2.45 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 0.91 சதவீதத்தினையும் 1.53 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், முட்டை, பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் பருப்பு, அரிசி மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைவடைந்தன. மேலும், உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (மின்சாரம், பராமரித்தலுக்கான பொருட்கள் மற்றும் மண்ணெண்ணை), தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு (சலவைச் சவர்க்காரம்) மற்றும் நானாவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் போன்ற துணை வகைகளின் விலைகளில்  அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்) துணை வகையில் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சி பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஓகத்து

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 ஓகத்தில் அதிகரித்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், யூலையிலிருந்து உயர்வடைந்து 2022 ஓகத்தில் 49.6 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்தது, இருந்தும் நடுநிலையான ஆரம்ப அளவு மட்டத்திற்கு சற்றுக் கீழேயே காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அறிக்கையிடப்பட்ட மேம்பாடுகளுடன் தயாரித்தல் நடவடிக்கைகளின் வீழ்ச்சி வீதம் குறைவடைந்த அதேவேளை, உற்பத்தியும் புதிய கட்டளைகளும் மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. மேலும், மேம்பட்ட நடமாட்டங்களுடன் வழங்குநர் விநியோக நேரம் சுருக்கமடைந்தது.

பணிகள் கொ.மு.சுட்டெண், தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக வீழ்ச்சியடைந்த பின்னர் 51.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, 2022 ஓகத்தில் வளர்ச்சிப் புலத்திற்கு திரும்பலடைந்து. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புகளால் இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது.

நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாகத் தண்டப்பணங்களை விதித்தல்/ சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட  தத்துவங்களின் பயனைக்கொண்டு,  நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் கடுமை என்பனவற்றினை பரிசீலனையிற்; கொண்டு விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுகெதிரான  மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற வகையில் நிதியியல் உளவறிதல் பிரிவு,  நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்புக்களை அமுல்படுத்துவதற்கு கீழே குறிப்பிடப்பட்டவாறு  ரூ.1.0 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக விதித்துள்ளது. தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதி,  திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 யூலை

2022 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த அதேவேளையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. 2022 யூலையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்;ச்சியானது வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை அழுத்தங்களுக்கு மத்தியில் வங்கித்தொழில் முறைமையில் காணப்பட்ட செயற்பாடுகளின் ஒட்டுமொத்த மிதமடைதலின் தாக்கத்தினைப் பிரதிபலித்த வேளையில், அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளும் இறக்குமதிக் கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்தத் துணைபுரிந்தன. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 யூலை மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்ததன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட அழுத்தங்களைத் தளர்த்தியது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 யூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 யூலையில் சிறிதளவு அதிகரித்துக் காணப்பட்டதுடன் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் மிகையடைந்து காணப்பட்டதன் மூலம் சென்மதி நிலுவையின் கடுமையான அழுத்தங்களின் கீழ் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளுக்கு ஆதரவளித்தது. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்தளவிலான தளத் தாக்கத்தின் அடிப்படையில் 2022 யூலையில் (ஆண்டிற்காண்டு) அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 யூலையில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியிடும் பொருட்டு மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையினால் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் பயன்படுத்தக்கூடிய மட்டம் குறைவடைந்து காணப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 361 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்கள் இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டுடன் தொடர்புடைய அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டியுள்ளனர்

ஏறத்தாழ ஐ.அ.டொலர் 2.9 பில்லியன் பெறுமதிகொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான 48 மாதகால உடன்படிக்கையொன்றுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் அலுவலர் மட்ட உடன்படிக்கையொன்றினை எட்டியுள்ளனர்.

பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையையும் மீட்டெடுக்கும் வேளையில் நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன இலங்கைக்கான புதிய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் குறிக்கோள்களாக அமைந்துள்ளன.

Pages

சந்தை அறிவிப்புகள்