Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஒத்தோபர் 21ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் முன்னொருபொழுதுமில்லாத வகையில் எடுக்கப்பட்ட நாணய தளர்த்தல்களினைத் தொடர்ந்து, சபையானது ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்திருந்ததுடன் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் பரந்தளவிலான கீழ்நோக்கிய திருத்தத்தின் தொடர்ச்சியினையும் எதிர்பார்க்கின்றது. இதன்மூலம், தற்போது காணப்படுகின்ற தாழ்ந்தளவிலான பணவீக்க சூழலில் பொருளாதாரத்தில் திறன்மிக்க துறைகளுக்கு வசதியான கொடுகடன் பாய்ச்சல்களினையும் உறுதிசெய்கின்றது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 செத்தெம்பரில் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஓகத்தில் 6.2 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் மாதாந்த அதிகரிப்பின் மூலம் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக 2020 ஓகத்தில் 13.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில்; 12.7 சதவீதத்திற்குக் குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஓகத்தில் 1.1 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் 1.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட் - 19 புத்துயிரளித்தல் வசதியினூடாக ரூ.178 பில்லியன் தொகையான 61,907 கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 செத்தெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் செத்தெம்பரில் விரிவடைந்தன. 

தயாரிப்பு நடவடிக்கைகள், 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் இவ்விரிவடைதலுக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் விசேடமாக உணவு மற்றும் குடிபானம், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறைகளின் தயாரிப்பில் அதிகரிப்புக்கள் பிரதான காரணமாக அமைந்தது.

பணிகள் துறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 54.3 கொ.மு.சு பதிவுடன் தொடர்ச்சியாக நான்காவது மாதமாகவும் தொடர்ந்தும் விரிவடைந்தது. பணிகள் துறை நடவடிக்கைகள் மேலும் மீட்சியடைவதனை எடுத்துக்காட்டி 2020 ஓகத்துடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள்இ வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஓகத்து

வர்த்தகப் பற்றாக்கையில் ஏற்பட்ட மேம்பாடு, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய ஆதரவுடன் 2020 ஓகத்துக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அநேக விடயங்களில் தொடர்ந்தும் மீட்சியடைந்திருக்கிறது. இம்மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த மசகெண்ணெய் விலைகள் என்பனவற்றின் காரணமாக வணிப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேம்பட்டது. இருப்பினும் கூட, தொற்று உலகளாவிய கேள்வியைப் பாதித்தமைக்கிடையிலும் ஏற்றுமதிச் செயலாற்றம் தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக வலுவான நிலையில் காணப்படுகிறது. அதேவேளை, 2020 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்தமையின் மூலம் நடைமுறைக் கணக்கு வலுவடைந்திருக்கிறது.

தேசிய LANKAQR முன்னெடுப்பு கொழும்பில் தொடக்கி வைக்கப்பட்டது

தேசிய LANKAQR முன்னெடுப்பான “நாடு முழுவதற்குமான LANKAQR” 2020 ஒத்தோபர் 5ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்தன அவர்களினால் பணம், மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அஜித் நிவார்ட் கப்ரால், கூட்டுறவுச் சங்கங்கள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு லசந்தா அழகியவண்ண, சமுர்த்தி, வீட்டுத்துறைப் பொருளாதாரம், நுண்பாக நிதி, சுயதொழில் வாய்ப்பு, வியாபார அபிவிருத்தி மற்றும் குறைப் பயன்பாடு அரச மூலவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு செகான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர், தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷமன், நிதி அமைச்சின் செயலாளர். திரு. எஸ்.கே. ஆட்டிகல உட்பட நாணயச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்