Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது

2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக  அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கிணங்க , 2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக  அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும்.

தவறிழைத்த நாணய மாற்றுநர்களுக்கெதிராக மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்கிறது

அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அமைவிடங்களில் மத்திய வங்கி தொடர்ந்த தலத்திலான பரீட்சிப்புக்கள், பின்வரும் நாணய மாற்றுநர்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீதங்களுக்கு அப்பாலான வீதங்களில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருப்பதனையும் அதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகின்றன. 

i. சுவிஸ் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 01 (தலைமை அலுவலகம்) மற்றும் கொழும்பு 06 (கிளை)

ii. வெஸ்ரேன் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 06 

இதன்படி, மேற்குறிப்பிட்ட நாணய மாற்றுநர்கள் உடனடியாக நடைமுறைக்குவரும் விதத்தில் தொடர்பான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு கட்டளையிடுகின்ற விதத்தில் எச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2022 சனவரி

ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரியில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 சனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று 2022 சனவரியில் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினை 2022 சனவரியில் இலங்கை வெற்றிகரமாகத் தீர்த்திருந்தது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்தான சார்க் நிதிய பரஸ்பர பரிமாற்றல் வசதியினது பெறுகையுடன் இம்மாத காலப்பகுதியில் வலுவடைந்து காணப்பட்டது. சனவரியில் ரூ. 200 - 203 வீச்சினுள் காணப்பட்ட சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது 2022.03.07 முதல் நடைமுறைக்குவரும் வகையில் பாரியளவிலான நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதித்ததுடன் மேல்நோக்கி சீராக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய நாணய மாற்று அனுமதிப் பத்திரத்தினை இரத்துச் செய்கிறது

பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்பது பற்றியும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டுள்ளமை பற்றியும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. 

பொதுமக்களுக்கான அறிவித்தல் - நாணய மாற்றுநர்கள்

உரிமம்பெற்ற வங்கிகளினால் நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் செலாவணி வீதங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு உயர்வான செலாவணி வீதங்களை வழங்குவதிலிருந்து அத்தகைய நாணய மாற்றுநர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

உரிமம்பெற்ற வங்கிகளினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களைத் தாண்டிய வீதங்களில் ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை அவர்கள் மேற்கொள்வார்களாயின் அவர்களது உரிமங்கள் இடைநிறுத்தப்படலாம்/ இரத்துச்செய்யப்படலாம் என நாணய மாற்றுநர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது;

Pages