அனைத்தையுமுள்ளடக்கிய எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் கண்காணிப்பு முறைமையொன்றினை தேசிய ரீதியிலான முக்கிய முன்னுரிமையொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையினை அடையாங்கண்டு இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் பங்கேற்புடன் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை எனப்படும் புதிய தரவு சேகரிப்பு முறைமையொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் தொடர்பிலான அனைத்தையுமுள்ளடக்கிய தரவு சேகரிப்பு முறைமையொன்றாகக் காணப்படுவதுடன் தற்போதுள்ள பல்வேறுபட்ட தரவு இடைவெளிகளை நிரப்புவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது. இது புள்ளிவிபர மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகிய இரு நோக்கங்களுக்குமான பெறுமதியான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல்வேறு அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்குத் துணைபுரியும்.
















