Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 யூலையில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 3.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 யூலையில் நிலவிய தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கங்களுடன் சேர்ந்து உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உணவுப் பணவீக்கம்  (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 10.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

பேரண்டப் பொருளாதார எறிவுகளின் இற்றைப்படுத்தல் தொடர்பான ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மறுக்கின்றது

பல ஊடக அறிக்கைகள் பற்றி மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதில் குறிப்பிட்ட சில பேரண்டப் பொருளாதார எறிவுகள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பானவை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி, 2020 ஏப்பிறலில், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டதன் பின்னர் அதன் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கு எந்தவித இற்றைப்படுத்தல்களையும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. கொவிட்-19 தொற்றினால் உருவான நிச்சயமற்ற நிலைமைகளைக் கவனத்தில் கொள்கையில் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றதுடன் இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நடவடிக்கைகளின் நியமக் குறிகாட்டிகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. இது அதன் பகுப்பாய்வுகளிலும் கொள்கை வழிகாட்டல்களிலும் மரபுவழியற்ற குறிகாட்டிகளையும் அதேநேர அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றது. 

இலங்கை மத்திய வங்கியானது இந்திய ரிசேர்வ் வங்கியுடன் நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியும் இந்திய ரிசேர்வ் வங்கியும் 2019-2020 காலப்பகுதிக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (சார்க்) நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கைக் கட்டமைப்பின் கீழ் 2020 யூலை 24ஆம் திகதியன்று நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டுள்ளன. இது, நாட்டின் சென்மதி நிலுவைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு குறுகிய கால நிதியிடலை வழங்கும்.

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைக் குறைபாடற்ற விதத்தில் பேணுகின்ற வேளையில், தேவையானளவு குறுகியகால வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினைப் பராமரிப்பதே இலங்கை மத்திய வங்கி இப்பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதன் நோக்கமாகும். இலங்கையின் தற்போதைய சவால்மிக்க வெளிநாட்டுப் பொருளாதாரச் சூழலானது கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பெரும்பாலும் விளைவிக்கப்பட்டதொன்றாகும். இப்பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மத்திய வங்கி பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க் உடன் செய்துகொண்ட மீள்கொள்வனவு உடன்படிக்கை பற்றித் தெளிவுபடுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்வதற்காக தற்காலிக மூலமொன்றாக ஐ.அ.டொலர் திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்காக பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க்குடன் அண்மையில் உடன்படிக்கையொன்றினைச் செய்திருக்கிறது. இவ்வசதியானது தொழில்நுட்ப சொற்பதத்தில் 'வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நாணய அதிகார சபைகளுக்கு" கிடைக்கத்தக்கதாக இருக்கும் ஓரிரவு மீள்கொள்வனவு வசதியாகும். உலகில் உள்ள அநேக மத்திய வங்கிகள் அவற்றின் குறுங்கால ஐ.அ.டொலர் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக இவ்வசதியினை நாடியிருக்கின்றன. இவ்வசதியானது, மத்திய வங்கியை வெளிநாட்டுச் செலாவணியிலமைந்த அதன் நீண்டகால முதலீட்டு சொத்துப்பட்டியலில் சடுதியான எந்தவொரு அமைப்பியல் சீராக்கத்தினையும் செய்யாமல் தேவையானபொழுது குறுங்கால நிதியிடல்களைப் பெற்றுக்கொள்வதனை இயலுமைப்படுத்துகின்றது.

நிதியியல் உளவறிதல் பிரிவு மூலம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் ரீதியான தண்டங்கள் விதிக்கப்படலாம். நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதிசாரா தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரமான தன்மை என்பவற்றை பரிசீலனையில் கொண்டு தண்டங்கள் குறித்துரைக்கப்படலாம்.

சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் 2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன்களுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

2020 யூலை 13-23 காலப்பகுதியின் போது சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி கட்டம் ஐஐ மற்றும் ஐஐஐஇன் கீழ் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ரூ.11,829 மில்லியன் தொகையுடைய 3,985 புதிய கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலே குறிப்பிடப்பட்ட புதிய ஒப்புதல்களின் மூலம் 2020 யூலை 23 வரை சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையிலும் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26,291ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, 2020 யூலை 23 வரை இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதியும் ரூ.72,079 மில்லியனுக்கு அதிகரித்துள்ளது. 2020 யூலை 23 வரை கீழே அட்டவணை 1இல் காட்டப்பட்டவாறு தீவு முழுவதும் 18,007 கடன்பெறுநர்களுக்கு மத்தியில் ரூ.45,777 மில்லியன் தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன.

Pages

சந்தை அறிவிப்புகள்