சுற்றுலாவிடுதிப் பணிகளை வழங்குவோர் இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களிடமிருந்தான கொடுப்பனவுகளை வெளிநாட்டுச் செலாவணியில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதனை மத்திய வங்கி கட்டாயமாக்கியிருக்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை சுற்றுலாவிடுதிப் பணிகளை வழங்குவோர் இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியில் மாத்திரமே கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதனை கட்டாயமாக்குகின்ற விதிகளை விடுத்திருக்கிறது. இவ்விதிகள் 2022 சனவரி 21ஆம் நாளிடப்பட்ட இல. 2263/41 கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இவ்விதிகள் வெளியிடப்பட்டமையினைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவுசெய்து கொண்டுள்ள அத்துடன் அதனால் உரிமம் வழங்கப்பட்டுள்ள சுற்றுலாவிடுதிப் பணி வழங்குவோர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டுமென தேவைப்படுத்தப்படுகின்றனர்: 

  • -  இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்காக வெளிநாட்டுச் செலாவணியில் மாத்திரம் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளுதல்.
  • -  அத்தகைய வெளிநாட்டு நாணயங்களை மூன்று வியாபார நாட்களுக்குள் சுற்றுலாவிடுதிப் பணி வழங்குவோரின் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வைப்புச் செய்தல் அல்லது உரிமம்பெற்ற வங்கியொன்றிற்கு விற்றுவிடுதல் வேண்டும்.
  • -  இலங்கைக்கு வெளியே வதியும் அத்தகைய ஆள் இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டையைப் (கொடுகடன் அட்டை, பற்று அட்டை, பயண அட்டை போன்றவை) பயன்படுத்தி கொடுப்பனவுகளைச் செய்திருக்கும் சந்தர்ப்பத்தில் கொடுப்பனவுகளை சுற்றுலாவிடுதிப் பணி வழங்குவோரின் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவு வைத்தல் வேண்டும்.

அதேநேரம், இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்கள் இலங்கைக்குள் வெளிநாட்டு நாணயத்தினைக் கொண்டு வந்தமைக்கும் அதனை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஒருவரினூடாக இலங்கை ரூபாவிற்கு மாற்றிக் கொண்டமைக்கும் மூல ஆவணச்சான்றுகளை அத்தகைய ஆட்கள் சமர்ப்பிப்பதற்குட்பட்டு,  இலங்கைக்கு வெளியே வதியும் அத்தகைய ஆட்களுக்கு வழங்கப்பட்ட பணிகள் தொடர்பில் இலங்கை ரூபாவில் செய்யப்படும் கொடுப்பனவுகளை சுற்றுலாவிடுதிப் பணிகளை வழங்குவோர் ஏற்றுக்கொள்ளலாம்.

 

Published Date: 

Monday, January 24, 2022