நாணயக் கொள்கைச் சாதனங்களும் நடைமுறைப்படுத்தலும்
நாணயக் கொள்கைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதற்காகப் பல வகையிலான கருவிகளை மத்திய வங்கி கொண்டிருக்கின்றது. தற்போது பயன்படுத்தப்படுகின்ற முக்கியமான நாணயக் கொள்கைக் கருவிகளாக ஓரிரவு கொள்கை வீதம், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், துணைநில் வசதிகள் மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் ரூபாய் வைப்பு பொறுப்புகள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடு போன்றன காணப்படுகின்றன.
ஓரிரவு கொள்கை வீதம்
ஓரிரவு கொள்கை வீதம் என்பது ஒற்றை கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் (2024 நவெம்பர் 27 அன்று தொடக்கம் நடைமுறைக்குவருதல்) கீழ் காணப்படும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் ஆகும். இது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை சமிக்ஞைப்படுத்துகின்ற முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாகும். இது பணச் சந்தையில் ஓரிரவு கொடுக்கல்வாங்கல்களுக்காக அடிப்படை வட்டி வீதமாக செயலாற்றுகின்றது. பணவீக்கத்தின் விரும்பத்தக்க பாதையொன்றினை அடையும் நோக்குடன், பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அவசியமானவிடத்து, ஓரிரவு கொள்கை வீதம் கால முறையாக மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்படுகின்றது.
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்
துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மூலம் உருவாக்கப்பட்ட துணைநில் வீத வீச்சினுள் செயற்பாட்டிலுள்ள திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் முறைமையொன்றின் கீழ் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையை நடாத்துகின்றது. இவை திரவத்தன்மை நிலைமைகளை முகாமைசெய்து ஓரிரவு கொள்கை வீதத்தில் அல்லது ஓரிரவு வீதத்திற்கு அண்மித்த குறுங்கால வட்டி வீதங்களைப் பேணும் பொருட்டு, நாணய கொள்கைச் சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லையுடன் ஓரிரவு கொள்கை வீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஒன்றில் திரவத்தன்மை மிகையாக இருக்குமிடத்து அதனை ஈர்த்துக் கொள்வதற்காகவும் அல்லது திரவத்தன்மை பற்றாக்குறையாகக் காணப்படுமாயின் திரவத்தன்மையினை உட்செலுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதுடன் இதன்மூலம் குறுங்கால வட்டி வீதங்களில் உறுதிப்பாடு பேணப்படுகின்றது. அரச பிணையங்களை நிரந்தர அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையில் கொள்வனவு செய்வதற்காக/ விற்பனை செய்வதற்காக ஏலங்களினூடாகத் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. (திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொள்கின்ற செய்முறையின் விரிவான விவரணமொன்றினைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்). ஏலமானது பல் விலைக்குறிப்பீடு பல் விலை முறைமைகள் என்பவற்றின் மீது இடம்பெறுகின்றன. பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு குறுங்கால ஏலங்களிலும் மூன்று வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் ஒவ்வொரு நீண்ட கால ஏலங்களிலும் ஆறு வரையிலான விலைக்குறிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியுமென்பதுடன் வெற்றி பெறுகின்ற விலைக்குறிப்பீட்டாளர்கள் தொடர்பான விலைக்குறிப்பீடுகளில் கோரிய வீதங்களில் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முதல்படி திரவத்தன்மை எதிர்வுகூறலாகும் (விபரணமொன்றினைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்)
ஓரிரவு கொள்கை வீதத்துடன சந்தை வட்டி வீதங்கள் அணிசேர்வதை இலக்காகக் கொண்டு திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் கருவிகளின் வீச்சொன்றை உள்ளடக்குகின்றன. பிணையங்களுக்கெதிராக திரவத்தன்மை உள்ளீடுகள் மற்றும் ஈர்த்தல்களில் ஈடுபடுகின்ற மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை இக்கருவிகள் உள்ளடக்குகின்றன. இது இரண்டாந்தரச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் அரசப் பிணையங்களின் விற்பனை அல்லது கொள்வனவுடன் ஈடுபடுகின்றது. ஒவ்வொரு இத்தொழிற்பாடுகளும் சந்தை வட்டி வீதங்களில் நிலையுறுதியை உறுதிப்படுத்தவதற்கு ஓரிரவு கொள்கை வீதத்துடன் உபாய ரீதியாக அளவீடு செய்யப்படுகின்றன. இதனூடாக, நாணயக் கொள்கை நிலைப்பாட்டையும் நாணயக் கொள்கை ஊடுகடத்தலையும் வலுப்படுத்துகின்றது. ஓரிரவு மற்றும் குறுகியகால மீள்கொள்வனவு ஏலங்களுக்கு, மத்திய வங்கி விலைக்குறிப்பீட்டு வீதங்களுக்கு உயர் எல்லையாக ஓரிரவு கொள்கை வீதத்தை நிர்ணயிக்கின்ற அதேவேளை குறைந்த எல்லையாக துணைநில் வைப்பு வசதி வீதம் செயற்படுகின்றது. மறுபுறத்தில், நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களுக்கு, ஓரிரவு கொள்கை வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்திற்குமிடையில் விலைக்குறிப்பீட்டு வீதங்களுக்கான வீச்சு தாபிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது ஓரிரவு மற்றும் குறுகிய கால ஏலங்களுக்கான விலைக்குறிப்பீட்டு வீதங்களின் பரவலை இவ்வீச்சினுள் தளம்பலடையச்செய்வதற்கு அனுமதிக்கின்ற அதேவேளை திரவத்தன்மை சீராக்கங்களுக்கு கட்டுபாடுடையதும், இருப்பினும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையை வழங்குகின்றது.
துணைநில் வசதிகள்
நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நாளாந்த ஏலங்களில் தமது திரவத்தன்மை தேவைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு இயலாதிருப்பதங்கு நிதியியல் நிறுவனங்களுக்கென துணைநில் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன. உதாரணமாக> பங்கேற்பாளரிடம் திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலத்தின் பின்னரும் கூட மிகையான பணத்தை பங்கேற்பாளர் கொண்டிருப்பாராயின், துணைநில் வைப்பு வசதி வீதத்தில் துணைநில் வைப்பு வசதியின் கீழ் அந்நிதியங்களை வைப்பாளர் வைப்புச்செய்து கொள்ளமுடியும். இதைப்போன்று> பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு பங்கேற்பாளருக்கு திரவத்தன்மை அவசியமானவிடத்து, பங்கேற்பாளர் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தில் துணைநில் கடன்வழங்கல் வசதியின் கீழ் நேர்மாற்று மீள்கொள்வனவு அடிப்படையில் நிதியங்களை கடனாகப்பெற்றுக்கொள்ளலாம். இதற்கமைய, இவ்வசதிகள் ஓரிரவு வட்டி வீதங்களில் பரந்தளவிலான தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.
நியதி ஒதுக்குத் தேவைப்பாடு
நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது வைப்புப் பொறுப்புக்களின் விகிதமாகக் காணப்படுவதுடன் இது மத்திய வங்கியுடன் பண வைப்பொன்றாகப் பேண வேண்டுமென உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளைத் தேவைப்படுத்துகின்றது. நாணய விதிச் சட்டத்தின் கீழ், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட வீதங்களில் மத்திய வங்கியுடன் ஒதுக்குகளைப் பேணுமாறு தேவைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ரூபா நியதிகளில் குறித்துரைக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் கேள்வி, தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பன நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளுக்குட்பட்டனவாகும்.
நியதி ஒதுக்குத் தேவைப்பாடானது கடந்த காலத்தில் பணநிரம்பலின் மீது செல்வாக்கினைச் செலுத்துவதற்குப் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், நாணயக் கொள்கையின் சந்தை சார்ந்த தன்மையினை மேம்படுத்துகின்ற மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மீது நியதி ஒதுக்குத் தேவைப்பாடு பாராதீனப்படுத்தக் கூடிய நிதிகளின் உள்ளார்ந்த செலவினைக் குறைக்கின்ற நோக்கில் கிரமமான நாணய முகாமைத்துவ வழிமுறையொன்றாக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் மீது தங்கியிருக்கும் தன்மை படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது. ஆகவே, தற்போது மத்திய வங்கி, சந்தையில் விடாப்பிடியாகக் காணப்படுகின்ற திரவத்தன்மைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினைப் பயன்படுத்துகின்றது. (நியதி ஒதுக்கு தேவைப்பாடு எவ்வாறு கணிக்கப்படுகின்றதென்பது தொடர்பான விபரங்களைப் பெறுவதற்கு இங்கே அழுத்தவும்).
ஏனைய கொள்கைக் கருவிகள்
மேலும், பொருளாதாரத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து, மத்திய வங்கியானது கொடுகடன் மீதான அளவுசார் கட்டுப்பாடுகள், வட்டி வீதத்தின் மீதான உச்சவரம்பு, தார்மீகக் கடப்பாடுகள் அதேபோன்று நாணய முகாமைத்துவ நோக்கத்திற்காக தொடர்பூட்டல் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.